![]() |
| விக்ரமாதித்யன் நம்பி |
கோயிலுக்குப் போய்விட்டு
வருகிற வழியில்
கீழே கிடந்த
ஸ்கூட்டர் சாவியை எடுத்து
பக்கத்திலிருந்த டீக்கடையில்
கொடுத்துவிட்டு வந்தேன்
(தேடிக்கொண்டு வந்தால்
கொடுத்துவிடச் சொல்லி)
போன மாசம்
கபால¦ஸ்வரர் கோயில் போயிருந்தபோது
ஸ்தல விருஷத்துக்கு அண்டையில் கிடந்த
முள்கொம்பை எடுத்து
ஒரு ஓரமாய்ப் போட்டுவிட்டு வந்தேன்
கொஞ்ச நாள்கள் முன்பு
தெரு நடுவே இறைந்துகிடந்த
கண்ணாடிச் சில்லுகளைப் பொறுக்கி
தூரப் போட்டுவிட்டு வந்தேன்
இரண்டு மூன்று மாசத்துக்கு முன்னால்
இளங்கவிஞன் ஒருவன் கவிதைகள் பற்றி
விலாவாரியாய்
கட்டுரையெழுதி அனுப்பி வைத்தேன்
இந்தக் கல்வியாண்டில்
தமிழக அரசுத் தயவில்
என் சின்ன மகனுக்கு
திரைப்படக் கல்லூரியில்
இடம் வாங்கிக் கொடுத்தேன்
வேலையில்லாமல்
திண்டாடித் திணறிப்போன பெரியவனை
இயக்குநர் நண்பர் ஒருவரிடம்
உதவியாளராகச் சொல்லிச் சேர்த்து விட்டிருக்கிறேன்
மனைவியிடம்
சண்டை போடாமலிருக்க தீர்மானித்திருக்கிறேன்
இனிமேல் கைநீட்டுவதில்லை
என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்
அம்மாவிடம்
கோபப்படாது இருக்கிறேன்
நண்பர்களை
தொந்தரவுபடுத்தக்கூடாது என்றிருக்கிறேன்
எழுதுவது படிப்பதில்
மும்முரமாய் ஈடுபட்டிருக்கிறேன்
எவ்வளவு நினைத்தாலும்
இவ்வளவுதான் முடிகிறது
இந்த வாழ்க்கையில்.
- விக்ரமாதித்யன் நம்பி
