Thursday, October 24, 2013

சருகுகள் - படித்ததில் பிடித்தது

மாடியை ஒட்டிய புத்தக அறையினுள்
எப்படியோ சேர்ந்துவிடுகின்றன சருகுகள்…
வாசிப்பினிடை தலைதூக்கினேன்
செல்லமாய் சிணுங்கி
ஒன்றையொன்று துரத்திச் சரசரத்தன
கட்டிலுக்கடியில் பதுங்கின மேலும் சில
பெருக்க மனதின்றி விட்டுவைக்கிறேன்
ஈரமனைத்தும் உறிஞ்ச
வெயில் வெறிகொண்ட இக்கொடுங்கோடையில்
எந்த வடிவிலேனும்
இந்த மாநகர வீட்டினுள் இருந்துவிட்டுப்போகட்டுமே
மரம்.

Thursday, September 5, 2013

ஒரு சாதாரண நாள்

இந்த நாளும் விடிய துவங்கிய்து
ஒரு சாதாரண நாளூக்கான 
எல்லாவிதமான அறிகுறிகளூடன்

சாலைகளில் வாகனங்களின்
உணர்ச்சியற்ற மெளன ஊர்வலம்...

பேரூந்து நிறுத்தத்தில்  காத்திருக்கும்
கேள்விக்குறிகள் படர்ந்த
அதே சோக முகங்கள்..

இன்னும் சோம்பல் முறிக்கும் 
சாலையோர மைனா...

இந்த நாளும் விடிய துவங்கிய்து
ஒரு சாதாரண நாளூக்கான 
எல்லாவிதமான அறிகுறிகளூடன்

போகப் போகத்தான் தெரியும்..

Saturday, August 3, 2013

இன்னுமொரு மழைக்காலை - எதிர்மறை

இந்த நாள் கொண்டு வரப்போகும் கோரங்களின்
மெல்லிய திரைச்சீலை

ஏதோ சூழ்ச்சி நடக்கப்போகும்
நாடக மேடையின் 
மாயான அமைதி

புன்னகை மறி(று)த்த முகங்கள் போல்
கறுத்து இருண்ட மேகங்களின்
அணிவகுப்பு

மழையின் அழகு 
பார்ப்பவர் மனதில்..

Saturday, June 22, 2013

தமிழ் இளைஞப் பொறியியலாளர்கள், அரூபக் கருத்துநிலை வாத்துக்கள் - http://othisaivu.wordpress.com/

நான் மின்னியல் / கணினியியல் சார் தொழில் நுட்ப நேர்காணல்களில் ஈடுபட்டு, கிட்டத்தட்ட 12 வருடங்களாகி விட்டன. வாழ்க்கை மிக மகிழ்ச்சியுடன் தான் போய்க் கொண்டிருந்தது சில நாள் முன்பு வரையிலும் கூட. ஆனால் துரதிருஷ்டவசமாக வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

ஏனென்று கேட்கிறீர்களா? ஹ்ம்ம்ம்.

… நான் ஒரளவு மதிக்கும் இளைஞர் ஒருவர் (ஒரு காலத்தில் என் குழுவில் இருந்தவர் – மன்னிக்கவும்,இவர் ஜாதி எனக்குத் தெரியாது) மின்னியல் / கணினியியல் சார் தொழில் நுட்ப முனைவுகளில் ஈடுபடுவதில் ஆர்வமோடிருப்பவர். ரொபாடிக்ஸ் தொடர்பான ஒரு புது தொழில்முனைவுக்காக, அதற்கான மூல ஆராய்ச்சிக்காக, நிபுணத்துவம் நிறைந்த ஒரு சிறிய இளம் குழுவை (SWAT team) அமைக்கக் கடந்த சில மாதங்களாக முயன்று கொண்டிருக்கிறார். சில மாதங்கள் கல்லூரி கல்லூரியாகச் சென்று கொண்டிருந்தார். பல மாணவர்களுடன் பேசியிருக்கிறார். அவரால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. கடைசியாக அயர்ச்சியுடன், தனக்குக் கிடைத்த ஆயிரக் கணக்கான (இவர் உண்மையாகவே சுமார் 2300 போல கிடைத்தது என்று சொன்னார்!)  விண்ணப்பங்களில், சுமார் நாற்பத்திச் சொச்சம் தொழில்நுட்பத் தமிழிளைஞர்களின் தற்குறிப்புகளுடன் (resumes!) எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி, குழுவினரைத் தேர்வு செய்வதற்குக் கொஞ்சம் உதவ முடியுமா என்று கேட்டார். மேலும் அவருடைய ‘ஐடியா’வை எப்படி ‘பேக்கேஜ்’ செய்து ஒரு வருமானமாதிரியை உருவாக்கலாம் என்பதற்கும் என் கருத்துக்களைக் கேட்டார். பல நாட்கள் தொடர்ந்து தொலைபேசியில் ஒரே அன்புத்தொல்லை வேறு.

நான் வழக்கமாக மழுப்பி விட்டு, இம்மாதிரிக் கெரில்லாத் தாக்குதல்களை திசை திருப்பி விடுவது வழக்கம். முயற்சியும் செய்தேன் — எனக்குப் பிடித்த விஷயங்கள் செய்வதற்கே நேரமில்லை. அப்படி நேரம் கிடைத்தால், என் சொந்தக் குழந்தைகளுடன் செலவழிக்கத்தான் விரும்புவேன். இந்த ஒத்திசைவு பூதம் வேறு. நீங்கள் தயவுசெய்து வேறு நபர்களிடம் போகக் கூடாதா? எனக்கும் தொழில் நுட்பத்துக்கும் வெகுதூரமாகி விட்டது – நான் ஒரு பழைய பஞ்சாங்கம், நீங்கள் சமைக்கப் போகும் புதியதோர் உலகத்திற்கு நான் எப்படி உதவ முடியும். எனக்கு, நாம் பார்க்கும் மிகப்பல இளைஞர்கள் பேரில் மரியாதையோ நம்பிக்கையோ இல்லை – ஆக, எனக்கு இதில் நேரம் செலவழிக்க அவ்வளவு விருப்பமில்லை – ஆனால் என் நல்வாழ்த்துக்கள். என்னை விட்டுவிடப்பா.

அவர் மறுபடியும் மறுபடியும் தொந்திரவு செய்து கொண்டேயிருந்தார். உங்கள் கை ராசியான கை (!) என்றெல்லாம் சொன்னார் – அவருக்கு மெய்யாலுமே மிகையான நகைச்சுவை உணர்ச்சிதான்.

அவரிடம் சொன்னேன் – நீங்கள் கொடுக்கப் போகும் சம்பளத்தில் அரைவாசியோ கால்வாசியோ கொடுத்தால் கூடப் போதும், அற்புதமான  ரஷ்யப் பொறியியலாளர்கள் கிடைப்பார்களே அவர்கள் நேரத்தை வீணடிக்காமல் காரியத்தைக் குறித்த நேரத்தில் தரமாகச் செய்து கொடுப்பார்கள். ஒரு காலத்தில் அவர்களால் ஆங்கில ஆவணங்களைச் சரியாக எழுத முடியாமலிருந்தது. தற்போது அந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் இதனைச் செய்யலாகாதா? பழைய நட்பை இப்படியா வெட்கமில்லாமல் உபயோகித்து அரைக் கிழவனான என்னை இப்படிப் படுத்தி எடுப்பீர்கள்?? எனக்கு வேறு வேலையே இல்லை என நினைத்த்தீர்களா?

அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இவ்வளவு பெரிய தமிழ்நாட்டில், நூற்றுக் கணக்கான உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கும் நாட்டில்  ஒரு சிறு குழுவைக் கூடவா நம்மால் தயார் செய்யமுடியாது? இந்த நிலைமையை வெட்கமில்லாமல் நீங்களுமா பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? வருடாவருடம் ஒரு லட்சத்துக்கு மேல் வெளி வந்து கொண்டிருக்கும் பொறியியலாளர்களில் இரண்டு பேர் கூடவா தேற மாட்டார்கள்?

நான் சொன்னேன்: தம்பி, நான் வெட்கமில்லாதவன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தமிழ் இளைஞர்கள் அனைவரும் உதவாக்கரைகள் எனச் சொல்லவில்லை. அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் அப்படிப்பட்டவர்கள் தான் என மட்டுமே நினைக்கிறேன். மேலும் அந்தச் சிறுபான்மையினரைக் கண்டுபிடித்து அவர்களை வளர்த்தெடுப்பது என்பது வைக்கோல்போரில் ஒருவைரஸ்ஸைத் தேடுவது போன்ற அயர்வான செயலாகும் என்றும்தான் நினைக்கிறேன். எனக்கு இந்தத் தேடலில் பிடித்தமில்லை. இந்தக் கேடுகெட்ட நிலைமைக்கு நாமெல்லாரும் காரணம்தான். ஒப்புக் கொள்கிறேன். நான் நிறைய பார்த்து விட்டுத்தான் சிறுவர்களோடு மட்டுமே சகவாசம் வைத்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை குழந்தைப் பருவத்திலிருந்தே நம் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களை வளர்த்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான். என்னால் எனக்கு முன்னறிமுகம் இல்லாத உயிரில்லாத சப்பை இளைஞர்களோடு, ஊக்கம் கொடுத்து, கெஞ்சி, கூத்தாடியெல்லாம் வேலை செய்ய முடியாது – நேர்காணல்களெல்லாம் முடியவே முடியாது – அதற்குத் தேவையான தடிமன் தோலும் பொறுமையும் சக்தியும் எனக்கில்லை. மன்னிக்கவும். என்னால் முடிந்ததைத் தான் நான் செய்யமுடியும்.  நான் செய்யவேண்டும் என நீங்கள் விரும்புவதை நீங்களே ஏன் செய்யக் கூடாது? உங்கள் குழு கூட்டப்பட்டு உங்கள் ரொபாட் வெளிவர என் வாழ்த்துக்கள்.

அவர் விடவில்லை – நீங்கள் மாறி விட்டீர்கள். நீங்கள் தமிழகத்தின் முன்னேற்றத்தில் நம்பிக்கையற்றவர் – ஒரு ஸினிக், அவநம்பிக்கைவாதி. ஒருவர் தமிழ் நாட்டுக்கு உதவி செய்ய வந்தாலும் அதற்கு ஒரு உதவியும் செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்களே.

- தம்பி, நான் சில விஷயங்களில் அவநம்பிக்கைவாதி ஆனால் பல விஷயங்களின் நம்பிக்கைவாதி. என்னால் முடிந்ததை, எனக்குப் பிடித்ததை நான் தமிழ் நாட்டில் செய்து கொண்டிருக்கிறேன். உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்கு உதவி செய்யவேண்டுமென்று எதிர்பார்ப்பது நியாயமா? நான் உங்களை என்  இடத்துக்கு வந்து வேலை செய் என்று அடம் பிடிக்கிறேனா? நான் மட்டுமா உங்களுக்கு அறிமுகம்? வேறு கிறுக்கனே கிடைக்கவில்லையா? உங்களோட டெல்லியிலேயே ரொபாடிக்ஸ், தொழில் முனைவுகள் பற்றித் தெரிந்தவர்கள் ஒருவர் கூடவா இல்லை? இப்படி வளர்த்த கடா மார்பில் பாய்ந்தால், நான் என்னதான் செய்ய முடியும்? நீங்கள் தமிழகத்துக்கு பாடுபட்டு உதவியெல்லாம் செய்ய வந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. தேவையில்லாத பிம்பங்கள் வேண்டாமே! சுயநலம் என்பது கெட்டவார்த்தையில்லை. சரிதானா?

… சார், நான் தமிழிளைஞர்களுக்கு முன்னுரிமைகொடுக்கலாம் என்று முயற்சி செய்கிறேன். நீங்கள் அதற்கு முட்டுக் கட்டை போடுகிறீர்களே!

… தம்பீ, நான் உங்களை வேலையோ முன்னுரிமையோ கொடுக்கவேண்டாமென்றா சொன்னேன்? என்னால் உதவ முடியாதென்றுதானே சொன்னேன் – அதுவும் நீங்கள் கேட்டதால்தானே சொன்னேன். முதலில் நீங்கள் – உங்களுடைய அறிவுரையை நான் கேட்டுக் கொள்ளவேண்டுமா அல்லது உங்களுக்கு என் உதவி வேண்டுமா என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், மேலே அவசியமில்லாமல் பேசி உங்கள் நேரத்தையும் வீணடிக்கவேண்டாம். இரண்டாவதாக – உங்களுக்குக் குறிக்கோள்களை அடைவது முக்கியமா அல்லது உணர்ச்சிகரமாக தமிழ் கிமிழ் என்று வெட்டி உதவாக்கரைப் பேச்சுப் பேச வேண்டுமா என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரியாதா – வெட்டிப்பேச்சினால் தமிழுக்கும் உபயோகமில்லை, உங்கள் வேலைக்கும் உபயோகமில்லை என்பது?? நீங்கள் ஏதாவது திராவிடக் கட்சியில் ஐக்கியமாகி விட்டீர்களா என்ன?

… சார், நான் சொன்னதைத் தப்பா புரிஞ்சுகிட்டீங்க. ஒரு வேகத்துல ஏதோ  பேசிட்டேன்னு நினைக்கிறேன். இதெயெல்லாம் விடுங்க – நம் ஒருகால நட்பினை நினைத்தாவது எனக்கு நீங்க உதவ முடியுமா?

… முடியாது, மன்னிக்கவும்.

.. சரி உங்கள் இஷ்டம். ஆனால் என் வெஞ்சர் ஐடியா நன்றாக இருக்கிறது என்கிறீர்கள் – உங்களுக்கு விஸிகாரர்கள் கிட்ட பழக்கம் எல்லாம் இருக்கிறது. அந்த பார்வையிலே பார்த்தால் கூட, என் முனைவு ஆதரிக்கத் தக்கதுதானே? நான் என்னதான் செய்யவேண்டும் என்று சொல்கிறீர்கள்?

… தம்பீ, நீங்கள் ஏன் எஞ்சினீயரிங் காலேஜ் கஞ்சினீயரிங் காலேஜ் என்று அலைகிறீர்கள்? எஞ்சினீயரிங் காலேஜில் படித்து காகிதப்பட்டம் வாங்கியவன் எல்லாம் எஞ்சினீயரா? ஏன் இந்த அரைகுறைக் குஞ்சாமணிகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? என் அனுபவம் படி 4-5% நிஜமான எஞ்சினீயர்கள் எப்படியாவது முட்டி மோதிக்கொண்டு வந்தால்தான் உண்டு. இந்த மைனாரிட்டி பசங்களை நீங்கள் பிடிக்கவேண்டும் – ஆனால் அது கடினம்; அதற்காக, கண்ட கழுதைகளை எஞ்சினீயர்கள் என்று பாவித்து எப்படி அவர்களுடைய ரெஸ்யூமேக்களை வாங்கினீர்கள்? நீங்கள் படித்த வேலூர் காலேஜ் நிலைமையே எப்படி இருந்தது? அப்போதே பரிதாபகரமாக இருந்தது.  இப்போது எப்படி இருக்கிறது? நீங்களே விசனப் பட்டீர்கள். நீங்கள் ஏன் ஒரு டிப்ளமா மட்டும் படித்த அல்லது +2 படித்த – கற்றுக் கொண்டு வேலைகளைச் செவ்வனே செய்யும் முனைப்புள்ள இளைஞர்களைத் தேர்வு செய்யக் கூடாது? நான் உங்களுக்கு சில இளைஞர்களைப் பரிந்துரை செய்ய முடியும்.

…சார், அவங்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது.

தம்பீ, உங்களோட எஞ்சினீயர்கள் எல்லாரும் ஷேக்ஸ்பியர் வம்சமா? என்னய்யா சொல்ல வருகிறீர்? ஜப்பான்காரன் ரஷ்யாக்காரனுக்கெல்லாம் ரொம்ப ஆங்கிலம் தெரிந்துதான் தொழில்முனைவுகளில் சிறந்து விளங்குகிறார்களோ? இவ்வளவு தமிழ் மேல் கரிசனம் இருந்தால் ஏன் நீங்கள் அந்த உண்மையான எஞ்சினீயர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தரக்கூடாது? உங்களுக்கு உங்கள் காரியம் ஆக வேண்டும். அவ்வளவுதானே! காரியம் கைகூட வேப்பிலை வேண்டுமானால் வேப்பிலை அடிப்பீர்கள், மேப்பிள் இலை வேண்டுமானால் அதை… தம்பீ, உங்கள் கண்ணோட்டம், பார்வை எனக்கு பிடிக்கவேயில்லை. உண்மையில் அருவருப்பாகவே இருக்கிறது.

அய்யோ சார், அவர்களுக்கு தன்னம்பிக்கையும் குறைவாகத்தான் இருக்கும்.

சரி. நீங்கள் போய், சகிக்க முடியாத தன்னம்பிக்கையுடன் நுனி நாக்கில் அரைகுறைக் குப்பை ஆங்கிலம் பேத்தும் அந்தத் திறமையற்ற, முனைப்பற்ற இளைஞர்களைச் சேர்த்திக் கொண்டு என்ன எழவு வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். என்னை விட்டுவிடுங்கள்.


…சார், குழந்தைகளெல்லாம் எப்படி இருக்காங்க? பலவருடம் முன் பார்த்தது…

.. தம்பீ – சமரசத்துக்கு வருகிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் அனாவசியமாகப் பொய் சொல்லவேண்டாம்; அவர்களை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது.

– சார் மன்னிச்சிடுங்க. கோவமா இருக்கீங்க போல, பிறகு பேசுகிறேன்.

=0=0=0=0=0=0=

ஆனால் அந்தத் தம்பி, ஒரு எழவெடுத்த, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமர் – தொடர்ந்து கழுத்தை அறுத்து, என்னை வேதாளமாக்கி நேர்காணல் முருங்கை மரத்தில் ஏறவே வைத்து விட்டார். (ஹ்ம்ம் – அவர் சுலபத்தில் மனம் தளருபவராக இருந்திருந்தால், முதலில் என் குழுவில் சேர்த்தியே இருக்க மாட்டேன்; எல்லாம் என்கஷ்டகாலம் தான்.)

சூழ்நிலை / செயல்முறை: நாற்பத்திச் சொச்சம் தொழில்நுட்பத் தமிழிளைஞர்களின் தற்குறிப்புகள் – அதில் சுமார் முப்பது புதுப்பட்டதாரிகள் – நைஸாக இன்னொரு முப்பது தற்குறிப்புக்களையும் என்னிடம் தள்ளினார் அந்த இளைஞர் – மொத்தம் எழுபத்திச் சொச்சம் ஆவணங்கள் – அதில் இரண்டு பக்கங்க்ளுக்கு மேற்பட்டு வளாவளாவென்று ‘நான் இதைச் செய்தேன்,’ ‘நான் அதைச் செய்தேன்!’ என்று பார்த்தவுடனே பொய் என்று தெரியும் பிழைகளும் பொய்மையும் நிரம்பிய விண்ணப்பங்களை ஒதுக்கினேன் – மிச்சம் 20 போல இருந்தவற்றை இரண்டுமூன்று முறை படித்தேன். தேவையற்ற பொதுவாகச் சொதப்பப்பட்ட ‘Reading Books, Listening Musics,  Watching films, I want to design an Intelligent Robot, Designing AI Robot, Conducting Cultural Fest’ தத்துப்பித்து வகையறாக்கள் 5 ஒதுக்கல் – பின்னர் ஒரு இழவு கணினியியல் / மின்னியல் பற்றியும் தவறில்லாமல்  எழுதுவதை விட்டுவிட்டு , ஹேக்கர்<பெயர்>, க்யூட்டி<பெயர்> (அதாவது HackerSubbu, CutieMani, IAmTheBoss at somemail,com) போன்ற முதிராத்தன்மையுடைய மின்னஞ்சல் முகவரிகள் காரணமாக மேலும் 4 ஒதுக்கல் – மிஞ்சிய 11 பேருக்கு அந்த இளைஞத் தொழில்முனைவோன்  மூலமாக  மூன்று புதிர்கள் அனுப்பினேன் (இணையத்தில் மேய்ந்து, அவற்றின் விடைகளைக் கண்டுபிடித்துக் காப்பியடிக்கக்க முடியாதவை அவை, நானே தயாரித்து அனுப்பியவை – ஆனால் மிகச் சிக்கலானவை அல்ல)  – விடைகளை அனுப்புவதற்கு இரண்டு நாள் சமயம் அந்தப் பிள்ளைகளுக்கு – இதில் ஐந்து பேர்கள் மட்டும் ஒரு  புதிருக்கு அரைகுறை விடை அளித்திருந்தார்கள் – அதில் இருவருடையது வார்த்தைக்கு வார்த்தை அச்சாக ஒரே மாதிரியாக (அதே இலக்கணப் பிழைகள் கூட) இருந்ததால் கடைசியில் ஒருவழியாக, தேறியது – அதாவது ‘தேற்றியது’ மூவர் மட்டுமே! நான் சொன்னேன் – இவர்கள் மேல் நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம், அவர்களுக்கும் பாவம் அழுத்தம் கொடுக்கவேண்டாம், விட்டுவிடுவோம் என்றேன் – ஆனால் நண்பருக்கு நப்பாசை, இந்த மூவரை எப்படியாவது எடுத்துக் கொண்டால், மந்திரஜாலமாக அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து விடும் என்ற எண்ணம்.

விதிகள்: நான் நேர்காணல் செய்ய வீட்டை விட்டு நகர மாட்டேன், தொலைபேசியில் தான் பேசுவேன் – தொலைபேசிக் கட்டணம் கொடுத்து விட வேண்டும் – ஒவ்வொரு தொலைபேசிப் பேச்சுவார்த்தை / நேர்காணல் ஒரு மணி நேரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும் – எனக்கு ஒரு பேச்சுவார்த்தைக்கு ரூபாய் ஐயாயிரம் – முன்னமேயே அறிவிக்கப் பட்ட, குறித்த நேரத்தில் அந்தப்பக்க இளைஞர் இல்லையானால் அந்த நேர்காணல் நடந்ததாகக் கருதப் படவேண்டும் – நான் இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கமாட்டேன் – தமிழில் அல்லது ஆங்கிலத்தில் நேர்காணல், இரண்டு மொழிகளிலும் கலந்தடித்து இல்லை – கேள்விகள் அவர்கள் தங்கள் குறிப்புகளில் எழுதியது பற்றி மட்டுமே கேட்கப் படும் – பொது அறிவு கிது அறிவு என்றெல்லாம் கேட்க மாட்டேன், அவர்களுக்கு இதற்கெல்லாம் கிலோ என்னவிலை என்று தெரியாது என்பது எனக்குத் தெரியும் – மொத்தம் 55 நிமிடங்களுக்கு நேர்காணல் – ‘Tell us something about yourself’ என்கிற பத்து நிமிட பஜனையெல்லாம் இருக்காது. ‘Do you have any questions’ என்றெல்லாம் கேட்கமாட்டேன் – வேண்டுமானால் அவர்களே கேட்டுக் கொள்ளட்டும் – நேர்காணல்கள் பதிவு செய்யப்பட்டு அவற்றின் ஒரு மணினேர ஆடியோ ஆவணங்களை நான் அந்த விண்ணப்பதாரர்களுக்கு அளிப்பேன் – அதில் ஐந்து நிமிடங்களுக்கு என் பேச்சு, நேர்காணல் பற்றிய கணிப்பு  / மதிப்பிடல்  இருக்கும் – தேர்வு செய்யப் பட்டார்களோ இல்லையோ, அவர்களுக்கு என்ன, ஏன், எப்படி ஆயிற்று எனத் தெரியவேண்டும், அதிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் – என்னுடைய முடிவுதான் கடைசி: நான் தேர்வு செய்தால்தான் தேர்வு பணி உத்தரவு எல்லாம்.

இளைஞத் தொழில்முனைவர் இவற்றுக்கு ஒப்புக்கொண்டார்.

இந்த மூன்று எழவெடுத்த ‘தொலைபேசிவழி நேர்காணல்களுக்கும் சில விஷயங்கள் பொதுவாக இருந்தன.

1. கேள்வி கேட்டவுடன் – பரக் பரக் பரக் என்று பக்கம் திருப்பும் சத்தம் கேட்கும், கூட யாராவது குசுகுசுவென்று பேசுவது கேட்கும், கீபோர்ட் சத்தங்கள் கேட்கும்… பின்னர் அரைகுறையாக ஏனோதானோவென்று பதில் – பெரும்பாலும் இணையத்திலிருந்து படிப்பார்கள். (ஒரு நேர்காணல்போது சம்பந்தப் பட்ட விக்கிபீடியா பக்கத்திலிருந்து படித்தார் ஒரு இளைஞர்!)

2. எந்தக் கேள்வி கேட்டாலும் – அந்தக் கேள்வியைரிபீட் செய்து – அதைக் கேட்கிறீர்களா சார் என்பார்கள். பின்னர் கொஞ்ச நேரம் மௌனம் – பின்னர் அதற்குத் தொடர்பேயில்லாத பதில் வரும்.

3. நாங்கள் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்பார்கள் – தம்பீ, எனக்கு நீ என்ன செய்தாய் என்றுதான் தெரியவேண்டும் என்றால் முழிப்பார்கள். மௌனம். நான் என்ன செய்தேன் என்று கேட்கிறீர்களா சார், எனக் கேட்பார்கள். மறுபடியும் மௌனம். அல்லது சகட்டுமேனிக்குப் பொய்.

4. அது அப்படி செய்யப் பட்டது, இது இப்படி செய்யப் பட்டது என்பார்கள் – என்ன எப்படி என்று கேட்டால், நான் அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்பார்கள் – மேலும் அதைப் பற்றிக் கேட்டால், நான் அதை மட்டும் செய்யவில்லை – ‘நான் அவனில்லை’ – நான் இதனை மட்டுமே செய்தேன் – சரி, அதில் என்ன செய்தாய் என்று கேட்டாம் – மௌனம்.

5. 7ஆவது செமஸ்டர் வரை படித்ததெல்லாம் மறந்து விட்டது என்பார்கள் – எட்டாம் செமஸ்டரில் ‘ப்ரோஜெக்ட்’ செய்தோம் என்பார்கள். அதில் என்ன செயதீர்கள் என்றால் மறுபடியும் உளறல், சொதப்பல்.

6. யார்தான் சொன்னார்களோ – இந்தப் பையன்கள் மகாமகோ கலைச்சொற்கள், சுருக்கங்கள் எல்லாம் தப்பும் தவறுமாக சுருக்கி விரித்து ஏகப்பட்ட அபத்தங்களைச் செய்தனர். சொல்லுக்குச் சொல், கோட்பாட்டுக்குக் கோட்பாடு தாறுமாறாகத் தாவி ஒரே கந்தறகோளம் – ரத்தக் களறி

7. I am team player, I am hardworking, I know java, please give me job என்று சொல்வார்கள். (யார் தான் இவர்களுக்கு இப்படிப் பேசச் சொல்லிக் கொடுத்தார்களோ!)

8. ஒருவர் கூட நான் கொடுத்த புதிர்களைப் பற்றிக் கேட்கவேயில்லை (ஆக, இவர்களுக்கு எதையும் பகுத்தறியவே தோன்றவில்லை)

தொடரத் தொடர – எனக்கு முட்டிக் கொண்டு வருகிறது…

சரி, நான் ஒருவரையும் தேர்வு செய்யவில்லை. கணக்குப் பார்த்தால் அப்படியும் இப்படியும் சுமார் 14 மணி நேரங்கள் இந்த விவகாரத்தில் செலவழித்திருக்கிறேன். வருத்தம் தான். நம் இளைஞர்கள் என்னவாகிக் கொண்டிருக்கிறார்கள்? நாம் அவர்களுக்கு என்ன செய்யக் கூடும்? அவர்கள் என்னதான் செய்யவேண்டும்?  கோபம் தான். அதற்கு மேல் அயர்வு

ஆனால் சொன்னசொல்படி, அந்தத் தொழில் நுட்ப இளைஞர் ரூபாய் பதினைந்தாயிரம் கொடுத்தார்.

ஆக, என் பள்ளியில் சுமார் மூன்று-நான்கு நாட்களுக்கு அனைவருக்கும் மதியவுணவுச் சோறு + காலைமாலைச் சிற்றுண்டி பொங்க வைத்த அந்த தொழில் நுட்ப இளைஞனுக்கு என் நன்றிகள். அவன் முனைவு வெற்றிபெற வாழ்த்துக்களும்…

குறிப்பு: தமிழ் இளைஞப் பொறியியலாளர்கள் பற்றி எழுதியிருக்கிறேன், ஆனால் எங்கே அந்த ‘அரூபக் கருத்துநிலை வாத்துக்கள்’ என்று கேட்கிறீர்களா?

அந்தக் கேலிச்சித்திரம் இங்கே. Abstruse Goose எனப்படும் கார்ட்டூன் தொகுப்பில் உள்ள ஒருகார்ட்டூன் தான் இது.

the_singularity_is_way_over_there

Sunday, June 9, 2013

வண்ணதாசன் கவிதை


நீ வருவதற்காகக்
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்துகொண்ட 
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்.
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்துவிட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக் கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக் குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.


Monday, June 3, 2013

இடைவெளி - மனுஷ்யபுத்திரன்


ஒரு எழுத்தாளன் எழுதாமல் இருப்பது என்பது ஒன்று அவனது ஆயத்தமாகும் காலமாக இருக்கவேண்டும் அல்லது சபிக்கப் பட்ட காலமாக இருக்கவேண்டும். இரண்டில் எது எனக்குப் பொருத்தமான காலம் என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பமடைகிறேன். ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’ தொகுப்பில் இடம் பெற்ற ‘அன்பிற்காக’ என்ற கவிதையை நான் எழுதி முடித்த தினத்தில் எனக்குத் தெரியாது அதற்குப்பிறகு ஒரு நீண்ட காலத்திற்கு நான் ஒரு வரிகூட எழுதப் போவதில்லையென்று.

யார் படைப்பின் ஊற்றுக்கண்களில் ஒரு அரக்கை வைத்து அடைத்து விட்டு போகிறார்கள் என்று தெரியவில்லை. தூக்கமற்றுத் தவித்த பல இரவுகளில் மனம் கலைந்து எழுத முயன்று தோல்வியடைந் திருக்கிறேன். அது ஒரு ஆதார மான உடல் உறுப்பு திடீரென செயலற்று போவது போல. பிறகு பனி விலகும் காலம் வந்தது. கடந்த ஆறு மாதத்தில் நான் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையும் அவற்றின் தளமும் எனக்கே நம்ப முடியாதது. எத்தனை முறை நான் அழிந்தாலும் நான் மீண்டு வருவேன் என்ற உறுதியை தந்த நாட்கள் இவை. இப்போதும் ஒவ்வொரு கவிதையையும் எழுதிமுடிக்கும் போது இது ஒரு வேளை கடைசிக் கவிதையாக இருந்து விடக்கூடாது என்கிற சின்ன பதட்டத் தோடுதான் அதிலிருந்து விலகிச் செல்கிறேன்.

Monday, May 27, 2013

நடந்து கொண்டிருந்தோம் (inspired by the experiences from our wholenight walking)

நடந்து கொண்டிருந்தோம்..

ஊர் அடங்க தொடங்கி இருந்தது..
இரவு மெல்ல விழிக்க
பௌர்ணமி நிலவு துரத்த
நடந்து கொண்டிருந்தோம்..

சலசலத்த பேச்சு வாக்கியங்களாகி
வார்த்தைகளாகக் குறைய
நடந்து கொண்டிருந்தோம்

சாலை முட்ட சென்ற வாகனங்கள்
அருகி ஓன்றிரண்டாய்
சிவப்பு விளக்கும் மறுத்து செல்ல
நடந்து கொண்டிருந்தோம்

கடைசி பேருந்தும் கடந்து சென்றது

நாள் முழுக்க பாதங்களை சுமந்து
ஓய்ந்த ரயில் நிலைய படிக்கட்டுகள்
கொஞ்ச நேரம் எங்கள்
முதுகுகளையும் சுமந்தன..

நடந்து கொண்டிருந்தோம்
பதினேழு பதிமூண்றாகி
பதினோண்றானது
எங்கள் எண்ணிக்கை..

எங்களைத் துரத்திய நிலவும்
கண்ணாம் பூச்சி ஆட்டம் துவங்கியது

கும்மிருட்டில் கடந்து சென்றன
மூன்று பூங்காகளும்
ஒரு ஹைதராபாத் சாலையும்..

அடைந்தோம் மலையுச்சி பூங்காவை
உணர்ந்தோம்
துயில் மறுத்தது நாங்கள் மட்டுமல்ல
வேறு பல ஜோடிகளும் என்று..
காதலை வாழ்த்திவிட்டு
நடந்து கொண்டிருந்தோம்

இன்னூமொரு மலை முகட்டுப் பூங்கா
நடுநிசி
எங்களையும் எங்களையும் தவிர
வேறு எந்த சலனமும் இல்லை

அந்த நேரத்தில் அந்த இடத்தில்
உடற் பயிற்சி செய்யும்
வயோதிக தம்பதிகள்
சிலிர்த்து போன நாங்கள்
அவர்களூக்கு கால்கள் இருப்பதை
உறுதி செய்துவிட்டு
நடந்து கொண்டிருந்தோம்

மலை இறங்கினோம்
எண்வரானோம்
துறைமுகத்தின் வால் பிடித்து
நடந்து கொண்டிருந்தோம்

பழைய மலேயன் ரயில் நிலையம்
கம்பீரமாய் கடந்து சென்றது

சோர்வு கவ்வ துவங்கியது
தேநீர் தேடல் ஆரம்பம்.
கண்டோம் கழுவி கவிழ்க்க பட்ட
மெக்டனல்டை..
அந்த நேரத்திலும் கும்பலாய்
இளையர் கூட்டம்.
சுடுபான தெம்பில்
நடந்து கொண்டிருந்தோம்

முதல் பேருந்தும்
காவலர் ரோந்து காரும் கடந்து
சென்றன
லேசாய் தென்றல் வீசியது
நடந்து கொண்டிருந்தோம்

கரையோர பூங்காவும் வந்தது
காலைக் கடன் கழித்தோம்
வேகம் குறைய
நடந்து கொண்டிருந்தோம்

மெல்ல விடியலும் எட்டிப் பார்த்தது
அதிகாலை புகைப்பட வகுப்புகளுக்காக வரத்துவங்கினர்
ஓட்ட நடை பயிற்சியரும் வந்தனர்
சில காலை வணக்கங்களும்
பல புன்முறுவல்களும்

மெரினா நீர் தேக்கதை தாண்டி
நடந்து கொண்டிருந்தோம்