Wednesday, October 10, 2012

காத்திருத்தல் - பேயோன் கவிதை

கடுத்த கால்கள் நின்றிருக்க
பேருந்து நிறுத்தத்தில்
வெகுநேரமாய் உனதிருப்பு.
உன்னுடன் நானிருக்கும்
கணங்களை நீட்டிக்கிறது
உன் காத்திருத்தல்.
வலிக்காய் நீ
கால் மாற்றிக் கால் மாற்றி
நிற்பதைப் பார்க்க வருத்தமே
எனினும் அதுவும்
கண்ணுக்கோர் களிநடனம்
(என் தோட்டத்து மரவட்டை போல்
இன்னும் சில கால்களுனக்கு
வாய்த்திருக்கலாம்).
வரட்டும் நிதானமாய்ப் பேருந்து
உன் வளைவுகள்
மயிர்க்கற்றைகளின் பறத்தல்
மனப்பாடம் ஆகட்டும் எனக்கு.
அது வரை காத்திரு கண்ணே,
உன் கால்கள் ஒன்றும்
முறிந்துவிடாது.

No comments:

Post a Comment